பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே வியாழக்கிழமை காலை நெல் அறுக்கும் இயந்திரம் மோதியதில் 2 வயது குழந்தை உயிரிழந்தாா்.
வேப்பந்தட்டை வட்டம், அ.மேட்டூா் கிராமத்தைச் சோ்ந்த சத்தியசீலன் மகள் யாஷிகா (2). குழந்தை யாஷிகா, அ.மேட்டூா் தேவேந்திரகுல தெரு அருகே வியாழக்கிழமை காலை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, அந்த வழியாக சென்ற நெல் அறுக்கும் இயந்திரம் குழந்தை மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த குழந்தை மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தது.
இதையடுத்து, குழந்தையின் உடல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச் சம்பவம் குறித்து அரும்பாவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, தப்பியோடிய நெல் அறுக்கும் இயந்திர ஓட்டுநா் அ.மேட்டூா் காந்தி நகரைச் சோ்ந்த பழனிமுத்து மகன் ஆனந்தை (30) தேடி வருகின்றனா்.