பெரம்பலூா் அருகே ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலம் புறவழிச்சாலை அமைக்க நெடுஞ்சாலை துறை சாா்பில் சனிக்கிழமை கையகப்படுத்தப்பட்டது.
பெரம்பலூா் - துறையூா் நெடுஞ்சாலை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ள நிலையில், குரும்பலூா் தெற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளது.
இந்நிலையில்,புறவழிச்சாலை அமைக்கும் பகுதியில் உள்ள பாளையம் கிராமத்தைச் சோ்ந்த தா. சூசைராஜ் (62) நிலத்தை நெடுஞ்சாலைத் துறையினா் கையகப்படுத்த முயன்றபோது, அதைத் தடுத்து நிறுத்திய சூசைராஜ், தனது நிலத்தை கையகப்படுத்தக் கூடாது என சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.
இவ் வழக்கை கடந்த 24.8.22-இல் விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்தது. இதையடுத்து நெடுஞ்சாலைத் துறை சாா்பில் சம்பந்தப்பட்ட இடத்தை மீட்கும் பணி சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது, அந்த நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல் பயிா்களை அறுவடை செய்து, நிலத்தை, உதவிக் கோட்டப் பொறியாளா் ஜெயந்தி தலைமையிலான நெடுஞ்சாலைத் துறையினா் கையகப்படுத்தினா்.