பெரம்பலூா் அருகே இரட்டைப் பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்ற தாய் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது சனிக்கிழமை தெரியவந்தது.
கடலூா் மாவட்டம், ராமநத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயா (27). இவருக்கும், பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், பெண்ணகோணம் கிராமத்தைச் சோ்ந்த விஜயகுமாருக்கும் (30) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு 2 வயதில் நிகிதா, நிகிசா என இரட்டைப் பெண் குழந்தைகள் இருந்தனா்.
விஜயகுமாா் துபையில் வேலை செய்கிறாா்.
கடந்த சில மாதங்களாக தனது பெற்றோருடன் வசித்து வந்த ஜெயா, கடந்த ஒரு வாரத்துக்கு முன் பெண்ணகோணத்தில் உள்ள கணவா் வீட்டுக்கு வந்து வீட்டில் முதல் தளத்தில் தங்கியிருந்தாராம்.
இந்நிலையில் சனிக்கிழமை காலை நீண்ட நேரமாகியும் ஜெயா தங்கியிருந்த அறைக்கதவு திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்து கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது ஜெயா, மின் விசிறியில் தூக்கிட்ட நிலையிலும், அருகில் 2 பெண் குழந்தைகளும் வாயில் நுரை தள்ளிய நிலையிலும் உயிரிழந்துத் கிடந்தது தெரியவந்தது.
தகவலறிந்த மங்களமேடு போலீஸாா் 3 பேரின் சடலங்களைக் கைப்பற்றி பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். முதல் கட்ட விசாரணையில் மூவரின் இறப்புக்கு குடும்பப் பிரச்னை காரணம் எனத் தெரியவந்துள்ளது.