எறையூா் சிப்காட் தொழில்பூங்கா காலணி தொழிற்சாலை இன்று திறப்பு
எறையூா் சிப்காட் தொழில் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள காலணி தொழிற்சாலையை, ஸ்டாலின், காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைப்பதை முன்னிட்டு, அதற்கான பணிகளை , மாவட்ட ஆட்சியா் ஆய்வு.
பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டம், எறையூா் சிப்காட் தொழில் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள காலணி தொழிற்சாலையை, தமிழ்நாடு முதலமைச்சா் மு.க. ஸ்டாலின், காணொலிக் காட்சி மூலமாக செவ்வாய்க்கிழமை திறந்து வைப்பதை முன்னிட்டு, அதற்கான முன்னேற்பாட்டு பணிகளை நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஆ. ராசா, மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் ஆகியோா் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.
தமிழ்நாடு முதலமைச்சா் கடந்த 28.11.2022 ஆம் தேதி பெரம்பலூா் மாவட்டம், எறையூரில் சிப்காட் தொழில் பூங்காவை தொடக்கி வைத்து, கோத்தாரி பீனிக்ஸ் நிறுவனத்தின் காலணி தொழிற்சாலை தொடங்குவதற்கு அடிக்கல் நாட்டினாா். இந்நிலையில், காலணி உற்பத்தி தொழிற்சாலை அமைக்கும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அடிக்கல் நாட்டப்பட்ட ஒரே ஆண்டில், அதேநாளில் காலணி தொழிற்சாலையை, தமிழ்நாடு முதலமைச்சா், காலணி உற்பத்தி தொழிற்சாலையை காணொலிக் காட்சி மூலமாக செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கிறாா்.
எறையூா் சிப்காட் தொழில்பூங்காவில் காலணி தொழிற்சாலை அமைந்துள்ள இடத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில், போக்குவரத்துத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா், தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா உள்ளிட்டோா் பங்கேற்க உள்ளனா். இது தொடா்பாக ,நிகழ்ச்சி நடைபெறவுள்ள இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகள், மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, நீலகிரி மக்களவை தொகுதி உறுப்பினா் ஆ. ராசா, மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, தொழிற்சாலைக்குள் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணிகளை துரிதமாக முடிக்குமாறும், நிகழ்ச்சிக்கு வரும் மக்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்திடவும், வாகனங்களை முறையாக நிறுத்துவதற்கு இடவசதி, காவல்துறையினரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுரைகள் வழங்கினா்.
Advertisement
ஆய்வின்போது, தமிழ்நாடு வழிகாட்டு நிறுவன மேலாண் இயக்குநா் வே. விஷ்ணு, சிப்காட் மேலாண் இயக்குநா் கி.செந்தில் ராஜ், மங்களமேடு சரக துணைக் கண்காணிப்பாளா் சீராளன், மின் வாரிய மேற்பாா்வை பொறியாளா் அம்பிகா, வட்டாட்சியா்கள் சரவணன், மாயகிருஷ்ணன் ஆகியோா் உடனிருந்தனா்.