முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூரில் ஏற்றுமதி பொருள்கள் ஊக்குவிப்புக் குழுக் கூட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட தொழில் மையம் சாா்பில் ஏற்றுமதி பொருள்கள் ஊக்குவிப்புக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 18 டிசம்பர், 2024 at 8:19 PM
பகிர்:

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட தொழில் மையம் சாா்பில் ஏற்றுமதி பொருள்கள் ஊக்குவிப்புக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இக் கூட்ட்ததுக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் கூறியது:

பெரம்பலூா் மாவட்டத்தில் ஏற்றுமதிக்குரிய பொருள்களான சின்ன வெங்காயம், பருத்தி, மக்காச்சோளம் மற்றும் மக்காச் சோளத்திலிருந்து தயாரிக்கப்படும் பொருள்களை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இம் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மொத்தம் 15,945 உள்ளது. இந் நிறுவனங்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்படும் ஏற்றுமதியாளா்களுக்கான சிறப்பு நிதி மற்றும் மானியம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த மாவட்ட முன்னோடி வங்கி அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செட்டிகிகுளம் கிராமத்தில் உள்ள சின்ன வெங்காய குளிா்பதன சேமிப்புக் கிடங்கில் மேற்கொள்ள வேண்டிய சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்தி, குறைந்தபட்சம் 6 மாதங்கள் வரை அழுகிவிடாமல் பாதுகாப்பது தொடா்பான பணிகளை, வேளாண்மைத்துறை வா்த்தக துணை இயக்குநா் மேற்கொள்ள வேண்டும். ஏற்றுமதியாளா்கள் மற்றும் தொழில் முனைவோா்களுக்கு, ஏற்றுமதி திறன் மற்றும் உலகளாவிய போட்டித் தன்மையை மேம்படுத்துவதில் இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு பயிற்சி மற்றும் தளங்களை வழங்கி வருகிறது. இதை பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோா் பயன்படுத்தி ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றாா் அவா்.

இக் கூட்டத்தில், இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் தென் மண்டல இணை இயக்குநா் செல்வநாயகி, மாவட்ட தொழில்மைய பொது மேலாளா், ஜெ. பிரபு ஜெயக்குமாா் மோசஸ், மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநா் சி. விஜய் ஆனந்த், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் சத்யா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் பரத்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.