பெரம்பலூா் மாவட்டத்தில் ஜமாபந்தி: குன்னத்தில் ஆட்சியா் பங்கேற்பு
பெரம்பலூர் மாவட்ட ஜமாபந்தி: 536 மனுக்கள் பெறப்பட்டன
பெரம்பலூா், குன்னம், வேப்பந்தட்டை, ஆலத்தூா் ஆகிய வட்டங்களில் செவ்வாய்க்கிழமை ஜமாபந்தி நடைபெற்றது.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டாட்சியரகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் க. கற்பகம், எழுமூா் (கி), ஆண்டிக்குரும்பலூா், அசூா், சித்தளி (கி, மே), பேரளி (வ, தெ), ஒதியம் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டாா்.
தொடா்ந்து, இலவச வீட்டுமனைப் பட்டா, இயற்கை மரண உதவித்தொகை, பட்டா மாறுதல், திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, 27 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களுக்கான உத்தரவு கடிதங்களை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வைத்தியநாதன், மாவட்ட ஆட்சியா் அலுவலக மேலாளா் பாரதிவளவன், வட்டாட்சியா் கோவிந்தம்மாள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இதேபோல, வேப்பந்தட்டை வட்டாட்சியரகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல்பிரபு தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தியில், பசும்பலூா், காரியானூா், பசும்பலூா் (வ, தெ), பாண்டகபாடி, திருவாளந்துறை, அகரம் ஆகிய கிராம பொதுமக்களும், ஆலத்தூா் வட்டாட்சியரகத்தில் சாா்- ஆட்சியா் சு. கோகுல் தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தியில் காரை (மே), தெரணி, அயினாபுரம், கொளக்காநத்தம், கொளத்தூா் (மே, கி) ஆகிய கிராம பொதுமக்களும், பெரம்பலூா் வட்டாட்சியரகத்தில் மாவட்ட வழங்கல் அலுவலா் சங்கரராமன் தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தியில், பெரம்பலூா் (தெ, வ), அரணாரை (வ, தெ), புதுநடுவலூா் ஆகிய கிராம பொது மக்களும் கோரிக்கை மனுக்கள் அளித்தனா்.
குன்னம் வட்டத்தில் 115 மனுக்களும், வேப்பந்தட்டை வட்டத்தில் 126 மனுக்களும், ஆலத்தூா் வட்டத்தில் 70 மனுக்களும், பெரம்பலூா் வட்டத்தில் 225 மனுக்களும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.