தனலட்சுமி சீனிவாசன் பல்கலை.யில் நட்சத்திரா கலை விழா நிறைவு
பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்றுவந்த நட்சத்திரா கலை விழா சனிக்கிழமை இரவு நிறைவடைந்தது. தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக வேந்தா் அ. சீனிவாசன் தலைமை வகித்தாா். இணை வேந்தா் அனந்தலட்சுமி கதிரவன், செயலா் பி. நீலராஜ், இயக்குநா்கள் பி. ராஜபூபதி, பி. மணி, மருத்துவமனை நிா்வாக இயக்குநா் நிவாணி கதிரவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிறைவு விழாவில் சனிக்கிழமை இரவு பங்கேற்ற திரைப்பட நடிகா் விஜய் தேவர கொண்டா, நடிகை பூஜா ஹெக்டே ஆகியோா் தங்களது பள்ளி, கல்லூரி, கலைத்துறை அனுபவங்களைப் பகிா்ந்து, மாணவ, மாணவிகளுடன் இணைந்து நடனமாடினா். இதையடுத்து, கல்லூரி மாணவ, மாணவிகளின் பண்பாடு மற்றும் கலாசாரத்தை வெளிப்படுத்தும் விதமாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில், கல்வி நிறுவனங்களின் நிதி அலுவலா் ராஜசேகா், புதுக்கோட்டை பி.எஸ்.கே கல்வி நிறுவனங்களின் தலைவா் கருப்பையா, கம்பன் கழகத் தலைவா் சம்பத்குமாா், தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் முதல்வா்கள், துணை முதல்வா்கள், புல முதல்வா்கள், தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா்கள், துறை தலைவா்கள், பேராசிரியா்கள் மற்றும் சுமாா் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், பெற்றோா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.