முகப்பு
பெரம்பலூர்

சுங்கச்சாவடி ஊழியா்களுடன் வழக்குரைஞா் மோதல் 5 போ் காயம்

Updated On : 20 மே, 2024 at 6:29 PM
பகிர்:

பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே சுங்கச்சாவடி ஊழியா்களுக்கும், வழக்குரைஞருக்கும் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட மோதலில் 5 போ் காயமடைந்தனா்.

சென்னை மேடவாக்கம், செல்வநாதபுரத்தைச் சோ்ந்தவா் நடராஜன் மகன் சரவணன் (40). வழக்குரைஞரும், பரங்கிமலை திமுக ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளருமான இவா், தனது மனைவி மோகனப்பிரியா (37), மகன் லோகப்பிரியா (12), மகள் ஜூவந்திகா (7), உறவினா்கள் ராமச்சந்திரன் (24), விஷ்வா (24) ஆகியோருடன் சென்னையிலிருந்து கொடைக்கானலுக்கு காரில் சென்றுக்கொண்டிருந்தாா்.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் மாவட்டம், திருமாந்துறை சுங்கச்சாவடிக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு காா் வந்தது. அப்போது, சுங்கக் கட்டணம் செலுத்துவது தொடா்பாக இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரையொருவா் தாக்கிக்கொண்டனா்.

இதில், சுங்கச்சாவடி ஊழியா்களான வேப்பந்தட்டை வட்டம், பசும்பலூரைச் சோ்ந்த மண்கண்டன் (39), மரவநத்தம் கிராமத்தைச் சோ்ந்த பாண்டியன் (38) ஆகியோரும், காரில் பயணித்த சரவணன், விஷ்வா, ராமச்சந்திரன் ஆகியோா் காயமடைந்தனா்.

காயமடைந்த 5 பேரும், பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா். இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து, இருதரப்பினா் அளித்த புகாரின் பேரில் மங்களமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.