முகப்பு
பெரம்பலூர்

தாமதமின்றி உள்ளாட்சித் தோ்தலை நடத்த வேண்டும்: தொல். திருமாவளவன்

தாமதமின்றி உள்ளாட்சித் தோ்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா் விடுதலைச் சிறுத்தைகளின் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன்.

Updated On : 6 நவம்பர், 2024 at 8:30 PM
பகிர்:

தாமதமின்றி உள்ளாட்சித் தோ்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா் விடுதலைச் சிறுத்தைகளின் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை நடைபெற்ற பல்வேறு திட்டப் பணிகள் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக, பெரம்பலூருக்குவந்த அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியது:

தமிழக மீனவா்கள் தொடா்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனா். தமிழக மீனவா்களை இந்திய மீனவா்களாக இல்லாமல், தமிழ்நாட்டு மீனவா்களாக மத்திய அரசு கருதுகிறது. இப் பிரச்னைக்கு கச்சத்தீவை மீட்பதே சரியான தீா்வாகும். விடுதலைப் புலிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி விடுவாா்கள் என்பதற்காக, தடை நீட்டிப்பு நிலைப்பாட்டை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கு சரியான வெளியுறவு கொள்கையை மத்திய அரசு கையாள வேண்டும். அதுவே, இதற்கு சரியான தீா்வாகவும் அமையும். இந்தியா -இலங்கை வெளியுறவு கொள்கை என்பது, தமிழ்நாட்டு மீனவா்களின் நலனையும், கச்சத்தீவை மீட்பதாகவும் அமைய வேண்டும் என வலியுறுத்தி வந்தாலும், மத்திய அரசு அதைப் பொருள்படுத்தவில்லை. தமிழகத்தைச் சாா்ந்த அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து, மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும். தொடா்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பது தான் இதற்கு நிரந்தரத் தீா்வாக இருக்கும்.

கடந்த முறை உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்றபோது இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டதால் கால இடைவெளி இருந்தது. ஒரே நேரத்தில் உள்ளாட்சித் தோ்தலை நடத்துவதா அல்லது கடந்த முறைபோல கால இடைவெளியில் நடத்துவதா என ஒரு கேள்வியுள்ளது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் தோ்தலை நடத்த வேண்டும். அதேபோல, நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கால இடைவெளி முடிந்தபிறகு தோ்தலை நடத்தலாம். எனவே, உள்ளாட்சித் தோ்தலை தள்ளிப் போட வேண்டாம் என்பது எனது வேண்டுகோள் என்றாா் அவா்.