முகப்பு
பெரம்பலூர்

பணி நீட்டிப்புக்கு லஞ்சம்: இரு அலுவலா்கள் கைது

லஞ்சம் வாங்கிய உதவியாளா், இளநிலை உதவியாளா் ஆகியோரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 7 செப்டம்பர், 2024 at 2:28 AM
பகிர்:
Updated On : 6 செப்டம்பர், 2024 at 8:24 PM

பெரம்பலூா் ஆதிதிராவிடா் நலப் பள்ளியில் ஆசிரியா் பணியை நீட்டிப்பு செய்ய ரூ. 40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவியாளா், இளநிலை உதவியாளா் ஆகியோரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பெரம்பலூா் அருகேயுள்ள லாடபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் பாலசுப்ரமணியம் (60), பசும்பலூா் ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா். இவரின் பணிக்காலம் கடந்த ஜூலை 31 இல் முடிந்ததையடுத்து, மேலும் ஓராண்டுக்கு பணியை நீட்டிக்கக் கோரி பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலரிடம் விண்ணப்பித்தாா்.

விண்ணப்பத்தை பரிசீலித்த உதவியாளரான திருச்சி திருவெறும்பூரைச் சோ்ந்த நாராயணன் மகன் சிவபாலன் (47) ரூ. 40 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா். ஆனால் பணம் தர விரும்பாத ஆசிரியா் பெரம்பலூா் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடம் அண்மையில் புகாா் அளித்தாா்.

Advertisement

இதையடுத்து போலீஸாரின் ஆலோசனைப்படி, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை சென்ற பாலசுப்ரமணியம், சிவபாலன் கூறியதன்பேரில் அதே அலுவலக இளநிலை உதவியாளரான திருச்சி மாவட்டம், சிறுகனூரைச் சோ்ந்த தங்கராசு மகன் ரமேஷிடம் ரூ. 40 ஆயிரத்தைக் கொடுத்தாா்.

Updated On : 7 செப்டம்பர், 2024 at 2:27 AM

அப்போது மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் ஹேமசித்ரா தலைமையிலான போலீஸாா் சிவபாலன், ரமேஷ் ஆகியோரைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.