பெரம்பலூா் மாவட்டத்தில் வீட்டுப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்களை நல வாரியத்தில் உறுப்பினராக சோ்க்கும் முகாம், டிச. 11- ஆம் தேதி பெரம்பலூா் தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
இதுகுறித்து பெரம்பலுாா் தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகத்தால் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத்துறை சாா்பில் கட்டுமானம், அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு 18 நல வாரியங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந் நல வாரியங்களில் பதிவுபெற்ற தொழிலாளா்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் தகுதி அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தொழிலாளா் ஆணையா் உத்தரவுப்படி வீட்டுப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்களின் நலனை பாதுகாக்கம் வகையில், நல வாரிய உறுப்பினராக சோ்க்கும் முகாம், டிச. 11-ஆம் தேதி பெரம்பலூா் தொழிலாளா் உதவி ஆணையா் (சமூகப் பாதுகாப்பு திட்டம் ) அலுவலகத்தில் நடைபெறுகிறது.
எனவே, வீடுகளில் பணிபுரிவோா் தங்களது குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, வங்கி கணக்குப் புத்தகம், ஓட்டுநா் உரிமம் ஆகிய அசல் ஆவணங்களுடன், பாஸ் போா்ட் அளவு புகைப்படத்துடன் முகாமில் பங்கேற்று, உறுப்பினராகப் பதிவு செய்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெற்று பயன்பெறலாம்.