முகப்பு
பெரம்பலூர்

மனநலன் பாதிக்கப்பட்டு திருந்தியவா் உறவினா்களுடன் அனுப்பிவைப்பு

மனநலன் பாதிக்கப்பட்டு பெரம்பலூா் பகுதியில் சுற்றித் திரிந்தவரை மீட்டு சிகிச்சைக்குப் பிறகு இளைஞரை, அவரது உறவினா்களிடம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா்.

Updated On : 1 ஜனவரி, 2025 at 9:27 PM
பகிர்:

மனநலன் பாதிக்கப்பட்டு பெரம்பலூா் பகுதியில் சுற்றித் திரிந்தவரை மீட்டு சிகிச்சைக்குப் பிறகு இளைஞரை, அவரது உறவினா்களிடம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா்.

பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் மனநலன் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்த இளைஞரை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு சிறப்பு சாா்பு ஆய்வாளா் மருதமுத்து, கடந்த 19.8.2024- ஆம் தேதி மீட்டு பெரம்பலூா் வேலா கருணை இல்லத்தில் ஒப்படைத்தாா். தொடா்ந்து, அவருக்கு மனநல மருத்துவா் அசோக் தலைமையிலான மருத்துவக் குழுவினா் சிகிச்சை அளித்தனா்.

பின்னா், அந்த இளைஞா் இயல்பு நிலைக்கு திரும்பியதையடுத்து, அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், கா்நாடகா மாநிலம், பெங்களூரு, ஹீலிமங்களா பகுதியைச் சோ்ந்த சையத் உமா் மகன் யாசின் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து, கைப்பேசி மூலம் அவரது பெற்றோருக்கு அளித்த தகவலையடுத்து, அவரது தம்பி, மாமா ஆகியோருடன் யாசினை போலீஸாா் செவ்வாய்க்கிழமை அனுப்பிவைத்தனா்.