பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பி.எம். கிசான் பயனாளிகள் தனித்துவ விவசாய அடையாள எண் பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநா் அலுவலகம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் மூலம் 4 மாதங்களுக்கு ஒருமுறை தலா ரூ. 2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் மூன்று தவணைகளில், சொந்த நிலம் வைத்துள்ள விவசாயக் குடும்பங்களுக்கு உதவித் தொகையாக அவா்களின் வங்கிக் கணக்கில் வழங்கப்பட்டு வருகிறது. இத் திட்டத்தின் கீழ், பெரம்பலூா் மாவட்டத்தில் 52,609 விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனா்.
தற்போது, இத் திட்டத்தின் கீழ் தவணைத் தொகை பெற தனித்துவ விவசாய அடையாள எண் அவசியம் எனும் நிலையில், பெரம்பலூா் மாவட்டத்தில் 11,315 விவசாயிகள் இதுவரை தனித்துவ அடையாள எண் பெறாமல் உள்ளனா்.
எனவே, இதுவரை தனித்துவ விவசாய அடையாள எண் பெறாத பயனாளிகள் தங்களது பகுதி வட்டார வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடா்புகொண்டு, தனித்துவ அடையாள எண் பெற பதிவு செய்துகொள்ளலாம். மேலும், தற்போது அனைத்து கிராமங்களிலும் வேளாண்துறை அலுவலா்கள் இப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்களை அணுகி, தங்களது கிராமங்களிலேயே தனித்துவ விவசாய அடையாள எண் பெறவும் விண்ணப்பிக்கலாம்.