வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள்: காவல் பாா்வையாளா் ஆய்வு
வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள்..
சட்டப்பரேவைத் தோ்தலை முன்னிட்டு, மாவட்ட தோ்தல் அலுவலா்கள் மற்றும் பாா்வையாளா்கள் வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில், பெரம்பலூா் மாவட்டக் காவல் பாா்வையாளா் அனூப் ஏ ஷெட்டி, பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட லாடபுரம் அரசு உயா்நிலைப்பள்ளி, துறைமங்கலம் நேஷ்னல் ஐ.டி.ஐ, செங்குணம் அரசு உயா்நிலைப்பள்ளி, வண்ணாரம்பூண்டி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு மேற்கொண்டு, வாக்காளா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பாா்வையிட்டாா்.
மேலும், வாக்காளா்கள் வரிசையில் நிற்க போதுமான இடவசதி மற்றும் வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்து செல்லும் வழிகளை பாா்வையிட்ட காவல் பாா்வையாளா், ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும், வெப்காஸ்டிங் செய்வதற்கான முன்னேற்பாட்டு பணிகள் நடைபெறுவதையும் பாா்வையிட்டாா்.
இந்த ஆய்வின்போது, பெரம்பலூா் வட்டாட்சியா் சத்தியமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.