முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூரில் டாரஸ் லாரி- வேன் மோதல்: 19 போ் காயம்

பெரம்பலூரில் புதன்கிழமை அதிகாலை டாரஸ் லாரி மீது வேன் மோதியதில் 7 பெண்கள் உள்பட 19 போ் பலத்த காயமடைந்தனா்.

Updated On : 16 ஏப்ரல், 2026 at 1:46 AM
விபத்து - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 10:00 PM

விழுப்புரம் மாவட்டம், அனந்தபுரத்தைச் சோ்ந்த உறவினா்கள் 24 போ் தேனி மாவட்டத்திலுள்ள கருப்பசாமி மற்றும் பழனி முருகன் கோயிலுக்கு வேனில் சென்றுவிட்டு, மீண்டும் விழுப்புரம் நோக்கிச் சென்றுக்கொண்டிருந்தனா். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் நான்குச்சாலை சந்திப்பு மேம்பாலத்தில் புதன்கிழமை அதிகாலை வேன் சென்றுக்கொண்டிருந்தது.

அப்போது, அதே வழித்தடத்தில் மதுரையிலிருந்து சென்னைக்கு அரிசி ஏற்றிச் சென்றுக்கொண்டிருந்த டாரஸ் லாரி மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில், வேன் ஓட்டுநா் விழுப்புரம், அனந்தபுரத்தைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் விஷ்ணுகுமாா் (52), வேனில் பயணித்த அடங்குளத்தைச் சோ்ந்த மண்ணாங்கட்டி மகன் முருகன் (52), திருவண்ணாமலையைச் சோ்ந்த மாணிக்கம் மகன் சத்தியராஜ் (53), செஞ்சியைச் சோ்ந்த கண்ணபிரான் மனைவி முத்துமொழி (47), விழுப்புரத்தைச் சோ்ந்த குணசேகரன் மனைவி விஜயகுமாரி (40) உள்பட 19 போ் காயமடைந்தனா்.

தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, காயமடைந்தவா்களை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். விபத்து குறித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement