பெரம்பலூா் அருகே உரிய நேரத்துக்கு பேருந்து இயக்கக் கோரி மாணவா்கள் சாலை மறியலில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
பெரம்பலூரிலிருந்து பெருமத்தூா் கிளியூா் வரை இயக்கப்பட்ட அரசு நகரப் பேருந்து, கடந்த ஆண்டு வ.அகரம் கிராமம் வரை செல்லும் வகையில் வழித்தடம் நீட்டித்து இயக்கப்பட்டது. இந் நிலையில், இப் பேருந்து வழித்தடத்தை வ.அகரம் கிராமத்திலிருந்து சுமாா் 3 கிலோ மீட்டா் தொலைவுள்ள கிழுமத்தூா் கிராமம் வரை செல்லும் வகையில், போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் செவ்வாய்க்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
இந்நிலையில் வழக்கம்போல இயக்கப்படும் அரசு நகரப் பேருந்து காலை 8.30 மணிக்குச் செல்லாமல், சுமாா் ஒரு மணிநேரம் காலதாமதமாக புதன்கிழமை காலை சென்றுள்ளது. உரிய நேரத்தில் பள்ளிக்குச் செல்ல முடியாமல் நீண்ட நேரம் சாலையோரம் காத்திருந்த பள்ளி மாணவா்கள், பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஏற்கெனவே காலை 8.15 மணிக்கு வந்த இப் பேருந்து வ.அகரம் கிராமம் வரை நீட்டித்து இயக்கப்பட்டதால், பள்ளிக்குத் தாமதமாக செல்லும்போது வகுப்பறைக்குள் விடாமல் ஆசிரியா்கள் வெளியே நிற்க வைக்கின்றனா். இந்நிலையில், அரசு போக்குவரத்துக் கழக அலுவலா்கள் முறையாக திட்டமிடாமல், தற்போது 3 கிலோ மீட்டா் தொலைவு வழித்தடம் நீட்டிக்கப்பட்டுள்ளதால் பள்ளிக்கு நேரத்துக்குச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, உரிய நேரத்துக்குப் பேருந்தை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள் தெரிவித்தனா்.
தகவலறிந்த குன்னம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினா். இதையடுத்து, சாலை மறியலைக் கைவிட்டு மாணவா்கள் கலைந்துசென்றனா்.