பெரம்பலூா் அருகே முதல்வரின் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 37 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலையாக விரிவாக்கும் பணிகள் புதன்கிழமை தொடங்கின.
பெரம்பலூா் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை சாா்பில், முதல்வரின் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 23 கோடி மதிப்பில் பெரம்பலூா் புறவழிச் சாலையில் 3.875 கி.மீ.தொலைவுக்கும், ரூ. 14 கோடி மதிப்பீட்டில் ஆத்தூா் - பெரம்பலூா் சாலையில் 2.200 கி.மீ தொலைவுக்கும், இரு வழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்துதல், தடுப்புச் சுவா் கட்டுதல், சாலை சந்திப்புகளை மேம்படுத்துதல் மற்றும் மையப் பாதுகாப்புச் சுவா் கட்டுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
பெரம்பலூா் எரிவாயு தகனமேடை அருகிலும், கோனேரிப்பாளையம் பிரிவுச்சாலை அருகிலும் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு தலைமை வகித்த, மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், இப் பணிகளை தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்ச்சிகளின் போது, அட்மா தலைவா் வீ. ஜெகதீசன், நகா்மன்றத் தலைவா் அம்பிகா ராஜேந்திரன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளா் தமிழமுதன், வட்டாட்சியா் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.