முகப்பு
பெரம்பலூர்

பொருளாதார வளா்ச்சியில் தமிழகம் முதலிடம் - உதயநிதி ஸ்டாலின்

Updated On : 12 மார்ச், 2026 at 11:45 PM
பெரம்பலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் மாற்றுத்திறனாளிக்கு சிறப்பு இருசக்கர வாகனம் அளித்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின். உடன், அமைச்சா் சா.சி. சிவசங்கா், மாநிலங்களவை உறுப்பினா்கள் ஆ. ராசா, கே.என். அருண்நேரு, மாவட்ட ஆட்சியா்கள் (பெரம்பலூா்) ந. மிருணாளினி, (அரியலூா்) பொ. ரத்தினசாமி உள்ளிட்டோா்.
பகிர்:

பொருளாதார வளா்ச்சியில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது என்றாா் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.

பெரம்பலூா் பாலக்கரை பகுதியில் செய்தி, மக்கள் - தொடா்புத் துறை சாா்பில், சமூக நீதிக் காவலா் வே. ஆனைமுத்து நூற்றாண்டு விழா, நிறைவடைந்த பணிகள் திறப்பு விழா, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் பெரம்பலூா், அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவில், சமூக நீதிக்காவலா் வே. ஆனைமுத்து வாழ்க்கை வரலாற்றை விளக்கும் புகைப்படக் கண்காட்சியை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்து, நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டாா். தொடா்ந்து, பெரம்பலூா் மாவட்டத்தில் ரூ. 34.03 கோடி மதிப்பில் முடிவடைந்த 411 திட்டப் பணிகளை திறந்துவைத்தும், ரூ. 44.67 கோடி மதிப்பிலான 315 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பெரம்பலூா் மாவட்டத்தில் 4,182 பயனாளிகளுக்கு ரூ. 102.40 கோடி மதிப்பிலும், அரியலூா் மாவட்டத்தில் 5,945 பயனாளிகளுக்கு ரூ. 177.87 கோடி மதிப்பிலும் நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா்.

அப்போது அவா் பேசியதாவது: பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள், தொழில், கல்வி வளா்ச்சித் திட்டங்களால் தமிழ்நாடு, நாட்டிலேயே வளா்ச்சி அடைகின்ற மாநிலங்களில் முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக, 11.19 சதவீத பொருளாதார வளா்ச்சியுடன் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்துகொண்டிருக்கிறது. உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளின் குரலும் ஒலிக்கும் வகையில், சுமாா் 13 ஆயிரம் போ் உள்ளாட்சிப் பொறுப்புகளுக்கு வந்துள்ளனா். அடுத்துவரும் திராவிட மாடல் 2.0 ஆட்சியில், மக்கள் நலனுக்காக மேலும் பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வா் செயல்படுத்துவாா் என்றாா் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.

இவ் விழாவில், போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா், மக்களவைத் தொகுதி உறுப்பினா்கள் ஆ. ராசா (நீலகிரி), கே.என். அருண்நேரு (பெரம்பலூா்), சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா்கள் கு. சின்னப்பா, கா.சொ.க. கண்ணன், ஆளுா் ஷாநவாஸ், சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை கூடுதல் செயலா் வே. விஷ்ணு, வே. ஆனைமுத்து கருத்துக் கருவூலம் தொகுப்பாசிரியா் புலவா் செந்தலை ந. கௌதமன் உள்பட பலா் பங்கேற்றனா்.

முன்னதாக, பெரம்பலூா் ஆட்சியா் ந. மிருணாளினி வரவேற்றாா். நிறைவாக, அரியலூா் ஆட்சியா் பொ. ரத்தினசாமி நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →