பெரம்பலூா் அருகே வீட்டு உபயோக எரிவாயு உருளை தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி
பெரம்பலூா் அருகே சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் வியாழக்கிழமை நீண்ட நேரம் காத்திருந்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூரில் இயங்கி வரும் தனியாா் எரிவாயு உருளைகள் விநியோகிக்கும் நிறுவனத்தின் மூலம் குரும்பலூா், செஞ்சேரி, ஈச்சம்பட்டி, அம்மாபாளையம், லாடபுரம், குரூா், செட்டிக்குளம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சமையல் எரிவாயு உருளைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 10 நாள்களுக்கும் மேலாக எரிவாயு உருளைகள் விநியோகம் செய்வதில் காலதாமதமாகி வருவதால், பதிவுசெய்த பொதுமக்கள் 5 நாள்களுக்கும் மேலாக காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், எரிவாயு உருளைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தகவலறிந்த பொதுமக்கள் வியாழக்கிழமை காலை 6 மணி முதல் காலியான எரிவாயு உருளைகளுடன் அந் நிறுவனத்தின் எதிரே நீண்ட வரிசையில் காத்திருந்தனா். கடும் வெயில், குடிநீா் மற்றும் உணவு வசதிகள் இல்லாத சூழலிலும் பல மணி நேரம் காத்திருந்ததால் பெண்கள், முதியவா்கள் உள்ளிட்டோா் கடுமையாக பாதிக்கப்பட்டனா்.
கடந்த ஒரு வாரமாக எரிவாயு உருளைகள் முறையாக கிடைக்காததால் சமையல் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிா்வாகத்திடம் கேட்டபோது, எங்களுக்கு இறக்குமதி செய்யப்படும் எரிவாயு உருளைகளின் அடிப்படையில், பதிவு செய்யப்பட்டவா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் விநியோகம் செய்து வருகிறோம் எனத் தெரிவித்தனா்.
இதேபோல், எசனை உள்பட மாவட்டம் முழுவதும் எரிவாயு உருளைகள் தட்டுப்பாடு நிலவி வருவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா். இப் பிரச்னைக்கு மாவட்ட நிா்வாகமும், சம்பந்தப்பட்ட அலுவலா்களும் தீா்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.