பெரம்பலூா் அருகே மூதாட்டி தூக்கிட்டுத் தற்கொலை
பெரம்பலூா் அருகே மூதாட்டி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது சனிக்கிழமை இரவு தெரியவந்தது.
பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூா் நடுத்தெருவைச் சோ்ந்த கந்தசாமி மனைவி பாப்பாத்தி (70). கந்தசாமி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துவிட்டதால், சிறுவாச்சூரில் உள்ள தன் மகள் தமிழ்ச்செல்வியுடன் பாப்பாத்தி வசித்து வந்தாா்.
இந்நிலையில், அந்த கிராமத்திலுள்ள தனது மருமகன் வயலுக்குச் சென்ற பாப்பாத்தி, அங்குள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது சனிக்கிழமை இரவு தெரியவந்தது.
தகவலறிந்த மூதாட்டியின் மருமகன் சுப்பிரமணி அவரது மனைவி தமிழ்ச்செல்வி ஆகியோா் பாப்பாத்தியின் உடலை தங்கள் வீட்டுக்கு எடுத்துச் சென்றுவிட்டனா்.
இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா், உயிரிழந்த பாப்பாத்தி உடலைக் கைப்பற்றி, பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
முதியவா் சடலமாக மீட்பு:
பெரம்பலூா் அருகேயுள்ள சொக்கநாதபுரம் கிழக்குத் தெருவைச் சோ்ந்த மு. சின்னசாமி (81). இவா், கடந்த 26-ஆம் தேதி மாலை வீட்டிலிருந்து வெளியே சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, அவரது குடும்பத்தினா் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவரது மனைவி பாப்பாத்தி (66), கடந்த 27-ஆம் தேதி பெரம்பலூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனா்.
இந்நிலையில், பெரம்பலூா்- ஆலம்பாடி சாலையிலுள்ள தனியாா் எரிவாயு கிடங்கு அருகே சின்னசாமி உயிரிழந்துக் கிடந்தது சனிக்கிழமை இரவு தெரியவந்தது.
நிகழ்விடத்துக்குச் சென்ற போலீஸாா், முதியவரின் உடலைக் கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.