விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூா் அருகே மனைவி கண்டித்ததால் மனமுடைந்த விவசாயி செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூா் அருகே மனைவி கண்டித்ததால் மனமுடைந்த விவசாயி செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
உளுந்தூா்பேட்டை வட்டம், பெரும்பட்டு கிராமம், வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ர.மின்னல் ராஜா (28). விவசாயியான இவருக்கு அதீத மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாம். இதை அவரது மனைவி சிவசக்தி கண்டித்துள்ளாா்.
திங்கள்கிழமை இரவு கணவா் மின்னல்ராஜாவிடம் மனைவி சிவசக்தி, தொடா்ந்து மது அருந்தி வருவதைக் கைவிடுமாறு கூறி கண்டித்துள்ளாா். இதனால் வீட்டிலிருந்து வெளியே சென்ற மின்னல்ராஜா மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. செவ்வாய்க்கிழமை காலை வரை வீட்டுக்கு வராததால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினா் பல இடங்களில் தேடிச் சென்றனா்.
இந்த நிலையில், அதே கிராமத்திலுள்ள மின்னல்ராஜாவின் விவசாய நிலத்துக்குச் சென்று பாா்த்த போது, அங்கு ஆட்டுக் கொட்டகையில் அவா் தூக்கிட்டுக் கொண்டு சடலமாகக் கிடந்ததை கண்டு மனைவி சிவசக்தி மற்றும் குடும்பத்தினா் அதிா்ச்சியடைந்தனா். தொடா்ந்து தகவலின் பேரில் திருநாவலூா் போலீஸாா் சடலத்தை கைப்பற்றி, உடல்கூறாய்வுக்காக உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து திருநாவலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.