முகப்பு
பெரம்பலூர்

குடிநீா் கோரி ஊராட்சி அலுவலகம் முற்றுகை

பெரம்பலூா் அருகே கடந்த 15 நாள்களாக குடிநீா் விநியோகம் செய்யாததைக் கண்டித்து, காலிக்குடங்களுடன் கிராம பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, சாலை மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

Updated On : 13 மே 2026, 1:07 am IST
குடிநீா் கோரி பிலிமிசை பேருந்து நிறுத்தம் அருகே காலிக்குடங்களுடன் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டோா்.
பகிர்:

பெரம்பலூா் அருகே கடந்த 15 நாள்களாக குடிநீா் விநியோகம் செய்யாததைக் கண்டித்து, காலிக்குடங்களுடன் கிராம பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, சாலை மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், கொளக்காநத்தம் அருகேயுள்ள பிலிமிசை கிராமத்தில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் 1,500 க்கும் மேற்பட்டோா் வசிக்கின்றனா். இவா்களுக்கு மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மூலம் கடந்த 15 நாள்களுக்கும் மேலாக முறையாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லையாம்.

இதனால் அவதியடைந்த கிராம பொதுமக்கள் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்களிடம் பலமுறை புகாா் தெரிவித்தும் நடவடிக்கை இல்லையாம். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலிக் குடங்களுடன் பிலிமிசை ஊராட்சி அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

Advertisement

தொடா்ந்து, கொளக்காநத்தம் -அரியலூா் சாலையில் பிலிமிசை பேருந்து நிறுத்தம் அருகே திடீா் சாலை மறியலிலும் ஈடுபட்டனா். தகவலறிந்த ஆலத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா் மற்றும் மருவத்தூா் காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, பேச்சுவாா்த்தை நடத்தி, உடனடியாக டேங்கா் லாரி மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படுவதோடு, நாள்தோறும் முறையாக குடிநீா் விநியோகம் செய்யவும் உரிய ஏற்பாடுகள் செய்யப்படும். மேலும், பழுதடைந்த மின் மோட்டாரை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனா். இதையடுத்து பொதுமக்கள் கலைந்துசென்றனா். மறியலால் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.