புதுக்கோட்டை பேருந்து நிலையம் விரிவாக்கத்தில் அமைக்கப்படும் கடைகளை பொது ஏலத்தில் விட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். முத்துராமலிங்கம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாவட்ட குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அறந்தாங்கி வட்டம் செங்கானத்தி, சூரக்குடி, வீராண்டான், மொட்டையாண்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆற்றுப்படுகையில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதால் அப்பகுதிகளில் நிலத்தடி நீராதாரம், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுக்கோட்டை பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. பேருந்து நிலையத்தின் உட்பகுதிகளில் உள்ள தங்கும் அறைகளை கடைகளாக மாற்றப்படுகிறது. இந்தக் கடைகளை முறையான பொது ஏலம் மூலம் வாடகைக்கு விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள சில பொதுத்துறை வங்கிகள் தேசிய வேலை உறுதித்திட்ட கூலியை வழங்காமல் பல மாதங்களாக முடக்கி வைத்துள்ளன. மேலும், குடும்பத்தில் உள்ள வேறு கடனுக்காக இந்தத் தொகையை வரவு வைக்க நிர்ப்பந்திக்கிறது.
இவற்றை உடனடியாக பயனாளிகளுக்கு வழங்க வேண்டும். புதுக்கோட்டையிலிருந்து தஞ்சை செல்லும் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநிலக் குழு உறுப்பினர்கள் எஸ். ஸ்ரீதர், எம். சின்னத்துரை, எஸ். ராஜசேகரன், உள்ளிட்டோர் பேசினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.