புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணம் பகுதியில் சனிக்கிழமை இரவு மின்னல் தாக்கியதில், பல வீடுகளில் தொலைக்காட்சி பெட்டி உள்ளிட்ட மின்சாதனப்பொருட்கள் பழுதடைந்தன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக இரவு நேரங்களில் இடியுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டையில் சனிக்கிழமை இரவு இடியுடன் பலத்த மழை பெய்தது.
அப்போது, திருக்கோகர்ணம் அருகே உள்ள நேரு வீதியில் சாகுல் ஹமீது என்பவரது ஓட்டு வீட்டில் மின்னல் தாக்கியது. இதனால் அந்த வீட்டின் மேற்கூரை இடிந்து சேதமடைந்தது. மேலும், அப்பகுதியில் உள்ள பல வீடுகளில் 10-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி பெட்டிகள், குளிர்சாதனப் பெட்டிகள் உள்ளிட்ட மின் சாதனங்கள் பழுதடைந்தன.