புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதியில் சேதமடைந்த சாலைகளில் கிரஷர் தூள்களை கொட்டி தாற்காலிகமாக மூடும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டதை கண்டித்து அப்பகுதியினர் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆலங்குடி- வடகாடு செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து, குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு தகுதியற்ற சாலையாக உள்ளது.
இந்த சாலையை சீரமைக்க கோரிக்கை எழுந்ததைத்தொடர்ந்து, சேதமடைந்துள்ள சாலையை சீரமைரக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் புதன்கிழமை ஈடுபட்டனர்.
அப்போது, சாலையை முறையாக சீரமைக்காமல், சாலைப் பள்ளங்களில் கிரஷர் தூள்களை கொட்டி பள்ளங்களை நிரப்பினராம்.
இதைப் பார்த்த அப்பகுதி வணிகர்கள், பொதுமக்கள், நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொண்ட பணியை தடுத்தி நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அப்பகுதியில் சாலை மறியலில்
ஈடுபட்டனர்.தகவலறிந்து அங்கு சென்ற ஆலங்குடி போலீஸார், நெடுஞ்சாலைத்துறையினர் சாலையை முறையாக சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.