ஆய்வு செய்யும் விஷயத்தில் தமிழக ஆளுநர் சட்டத்துக்குட்பட்டே செயல்படுகிறார் என்றார் பாஜக எம்.பி.யும், அக்கட்சியின் மூத்த தலைவருமான இல. கணேசன்.
இதுகுறித்து புதுக்கோட்டையில் அவர் வியாழக்கிழமை கூறியது:
தமிழகத்தில் ஆளுநர் மேற்கொள்ளும் ஆய்வு குறித்து முதல்வரோ, அமைச்சர்களோ எந்தக் கருத்தும் தெரிவிக்காத நிலையில், ஆட்சி அதிகாரத்தில் இல்லாதவரும், அண்மையில் ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லாதவருமான சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் ஏன் கவலைப்படுகிறார் எனத் தெரியவில்லை.
மக்களோடு தொடர்பில் இல்லையென்றால் மக்கள் தொடர்பில்லாமல் ஆளுநர் செயல்படுகிறார் என்று குற்றம்சாட்டுகின்றனர். மக்கள் பிரச்னை குறித்து ஆய்வு செய்தால் அதையும் விமர்சிக்கிறார்கள். தமிழக ஆளுநர் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே செயல்படுகிறார். அவரது செயல்பாடுகள் பாராட்டுக்குரியவை.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் மக்களுக்கு நன்கு அறிமுகமானவரை பாஜக வேட்பாளராக களமிறக்கியுள்ளது. அதிமுகவுக்கும், திமுகவுக்கும் வாக்களித்த மக்கள் தற்போது மாற்றத்தை விரும்புகிறார்கள். அவர்கள் பாஜகவுக்கு வாக்களிப்பர் என்றார் அவர்.