புதுக்கோடை மாவட்டம், ஆவூர் அருகேயுள்ள மண்டையூர் பெரிய அய்யனார் கோயில் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் ஆனித்திருவிழா காப்புகட்டுதலுடன் கடந்த 7 ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடர்ந்து விழாநாட்களில் பெரிய அய்யனாருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு, ஒவ்வொரு நாளும் மண்டகப்படிதாரர்களின் சிறப்பு நிகழ்ச்சிகள் வானவேடிக்கையுடன் நடைபெற்றது.
இதையடுத்து, விழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட பெரிய அய்யனார் சுவாமி எழுந்தருளிய தேரை திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மாலை 6 மணியளவில் தேர் நிலையை அடைந்தது. இதில், சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், ஆட்சியர் சு. கணேஷ், வட்டார வளர்ச்சிஅலுவலர்கள் சுப்பிரமணியன், செல்வராஜ், மண்டையூர், அரசிக்காடு, ஊருணிமேடு, திருச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பெருமளவில் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் படுகளம், பாரிவேட்டை, மாலை சுவாமிக்கு மஞ்சள் நீராட்டு நிகழ்வுகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.