புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் அரசு கிளை அச்சகம் விரைவில் நவீனப்படுத்தப்படும் என்றார் தமிழக செய்தித் துறை அமைச்சர் கடம்பூர்ராஜூ.
இந்த அச்சகத்துக்கு வெள்ளிக்கிழமை நேரில் சென்ற அமைச்சர் கடம்பூர் ராஜூ, அச்சகத்தில் அரசுத்துறை படிவங்கள் அச்சிடும் பணி, புத்தகம் கட்டும் பிரிவில் அச்சிட்ட படிவங்களை பைண்டிங் செய்யும் பணி, அச்சக பணியாளர்களின் எண்ணிக்கை, மாற்றுத்திறனாளி பணியாளர்கள் போன்ற விவரங்களை அச்சக மேலாளரிடம் விசாரித்தார்.
இதையடுத்து அவர் மேலும் கூறியது: புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக அரசின் செய்தித் துறையின் கட்டுப்பாட்டில் பொது அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் அரசு கிளை அச்சகமானது 150 ஆண்டுகளைக் கடந்து நிற்கும் பழமையான அச்சகம் என்ற பெருமை வாய்ந்தது. இந்த அச்சகத்தில் சென்னை, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, திருவள்ளுர், திருவண்ணாமலை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 8 மாவட்டங்களின் அரசிதழ்கள், காவல்துறை, சுகாதாரத் துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை, பொதுப்பணித்துறை ஆகிய அரசுத் துறைகளின் படிவங்கள் அச்சிடப்படுகின்றன. இதை மேம்படுத்தும் வகையில புதிதாக நவீன அச்சு இயந்திரங்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்த அச்சகத்துக்குக் கூடுதல் இடம் ஒதுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். இந்துசமய, அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன், அச்சக மேலாளர் தி. சத்தியமூர்த்தி உள்பட பலர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.