விராலிமலை பகுதியில் வியாழக்கிழமை சூறைக்காற்றுடன் பெய்த மழை பெய்தது. அப்போது இடி விழுந்த அதிர்ச்சியில் கூலித் தொழிலாளிகள் 12 பேர் மயக்கமடைந்தனர். அதில் நினைவு திரும்பாத 2 பேர் புதுகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் வெயில் தாக்கம் கடுமையாக இருந்து வருவதால் பொதுமக்கள் பிற்பகல் வேளையில் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிலேயே முடக்கியுள்ளனர்.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக அக்னி வெயில் தாக்கத்தால் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்த நிலையில் வெப்பம் தணியும் வகையில் மழையை எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில் விராலிமலை, அன்னவாசல், இலுப்பூர் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை சூறைக்காற்றுடன் மழை பெய்தது.
இதில், இலுப்பூர் பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்தபோது மேட்டுச்சாலைப்பகுதியில் சாலையோரம் மரத்தடியில் நின்று கொண்டிருந்த கூலித்தொழிலாளர்கள் 12 பேர் இடி விழுந்த அதிர்ச்சியில் மயக்கமடைந்தனர். அதில், கல்லிடைக்கன்பட்டியைச் சேர்ந்த பாண்டி மனைவி ஆராயி (30), போலம்பட்டி சின்னு மகன் ஓமந்தூர் (23) ஆகியோர் சிகிச்சைக்காக புதுகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.