புதுக்கோட்டை நகராட்சியில் ரூ. 1.55 கோடியில் அமைக்கப்பட்ட குடிநீர்த் திட்டப் பணியை சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தொடக்கி வைத்தார்.
புதுக்கோட்டை நகராட்சி நரிமேடு என்.ஜி.ஓ. காலனியில் மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் தலைமையில், வீட்டுவசதி வாரியத்தலைவர் பி.கே. வைரமுத்து தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, வீடுகளுக்கு குடிநீர் விநியோகிக்கும் திட்டத்தைத் தொடக்கிவைத்து அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியது:
புதுக்கோட்டை மாவட்ட மக்கள் பயன்பெறும் கடந்த 2 மாதங்களுக்கு முன் முதல்வரால் காவிரிக் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
அதனடிப்படையில் நரிமேட்டில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இப்பகுதி பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் பொதுமக்கள் தினமும் காலையில் 6 மணி முதல் 8 மணி வரை காவிரிக் குடிநீரை பெற்றுப் பயன் பெறலாம்.
புதுக்கோட்டை நகராட்சி 1 -ஆவது வார்டு நரிமேடு என்.ஜி.ஓ காலனியில் ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சி நிதித் திட்டத்தின்கீழ் ரூ. 75 லட்சத்தில் புதிதாகக் கட்டப்பட்ட 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் மச்சுவாடி, லெட்சுமிநகரில் தலா ரூ. 40 லட்சத்தில் கட்டப்பட்ட தலா 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிகளும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் 1, 2, 3, 41, 42 வார்டு பொதுமக்கள் பயன் பெறுவர்.
புதுக்கோட்டை நரிமேட்டில் தமிழ்நாடு குடிசை மாற்றுவாரியத்தின் சார்பில் வீடில்லா பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சுமார் 2 ஆயிரம் வீடுகள் கட்டப்படுகின்றன.
இதைப்போல முள்ளூரி 200 வீடுகள் கட்டப்பட உள்ளன. தமிழக அரசின் இத்தகைய நலத்திட்ட உதவிகளை பெறும் பொதுமக்கள் உரிய முறையில் பயன்படுத்த வேண்டும் என்றார் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராமசாமி, சார் ஆட்சியர் கே.எம்.சரயு, கந்தர்வக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் பா.ஆறுமுகம், நகராட்சி ஆணையர்(பொ) ஜீவாசுப்பிரமணியன், மத்திய தொலைத்தொடர்பு ஆலோசனைக்குழு உறுப்பினர் க.பாஸ்கர், முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் எஸ். அப்துல்ரகுமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.