ஒருங்கிணைந்த உரநிர்வாகம் குறித்து செயல்விளக்கம்
ஆலங்குடி அருகேயுள்ள வம்பன் வேளாண் அறிவியல் நிலையத்தின் சார்பில் ஒருங்கிணைந்த உரநிர்வாகம் குறித்து விவசாயிகளுக்கு புதன்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
ஆலங்குடி அருகேயுள்ள வம்பன் வேளாண் அறிவியல் நிலையத்தின் சார்பில் ஒருங்கிணைந்த உரநிர்வாகம் குறித்து விவசாயிகளுக்கு புதன்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
வம்பன் வேளாண் அறிவியல் நிலையம் மூலம் கோ-52 நெல் ரகத்தை பரவலாக்கம் செய்யும் விதமாக ஆலங்குடி, அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி, கந்தர்வக்கோட்டை உள்ளிட்ட வட்டாரங்களில் செயல்விளக்கத் திடல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆவுடையார்கோவில் வட்டாரத்துக்குள்பட்ட பாண்டிபத்திரம் கிராமத்தில் தங்கராசு என்பவரது வயலில் நெல் விளைச்சலை அதிகரிக்கும் வண்ணம் ஒருங்கிணைந்த உர நிர்வாகத்தில் பயிரிடப்பட்டுள்ள கோ-52 நெல் ரகத்தை வம்பன் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் லதா, உதவி பேராசிரியர் முனைவர் கதிரவன் ஆகியோர் பார்வையிட்டனர்.
அப்போது, உதவி பேராசிரியர் கதிரவன் கூறியது:
மண் பரிசோதனை மூலம் தேவையான உரங்களை கணக்கிட வேண்டும்.
நடவு வயலில் நெல் பயிர் வேர்பிடித்து நன்றாக வளர்வதற்கும், நெல் பயிரில் பூக்கள் பூப்பதற்கும், நெல் மணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கும், நெல்மணிகள் முதிர்வடைவதற்கும் மணிச்சத்து இடவேண்டும். அதேபோல், நடவு வயலில் சாம்பல் சத்து இடும் போது, நெல் பயிரின் திடத்தன்மையை ஊக்குவித்து, பூச்சி மற்றும் பூஞ்சாண நோய்களால் பாதிப்படையாமல் இருக்க எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது. எனவே, விவசாயிகள் சமச்சீரான உரங்களை இட்டு மகசூலை அதிகரிக்க வேண்டும் என்றார்.