சிறுபான்மையின மாணவிகள் மவுலானா ஆசாத் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட தகவல், சிறுபான்மையினர் சமூகத்தைச் சார்ந்த, கல்வியில் சிறந்து விளங்கி பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் தொடர்ந்து கல்வி பயில முடியாத நிலையில் உள்ள மாணவிகளை அங்கீகரித்து, ஊக்குவிக்கும் வகையில் "பேகம் ஹஸரத் மாஹல் நேஷனல் ஸ்காலர்ஷிப்' என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் சிறுபான்மையினராகக் கருதப்படும் முஸ்லிம், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பெளத்தர்கள், ஜைனர்கள், பார்சிஸ் ஆகிய சிறுபான்மை சமூகத்தில் 9 -ஆம் வகுப்பு முதல் 12 -ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
9 முதல் 11-ஆம் வகுப்பு வரை பயில்வோர் குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்களும் மற்றும் 12-ஆம் வகுப்பு வரை பயில்பவர்கள் குறைந்த பட்சம் 55 சதவிகித மதிப்பெண்களும் அல்லது அதற்கு இணையான கிரேடு மதிப்பெண்களை முந்தைய வகுப்புகளில் பெற்றிருக்க வேண்டும். மாணவிகளின் பெற்றோர்,காப்பாளரின் ஆண்டு வருமானம் அனைத்து வகையிலும் ரூ. 2 லட்சத்துக்கு மிகாமலிருக்க வேண்டும். 9 முதல் 10 -ஆம் வகுப்பு வரை ஆண்டுக்கு ரூ. 10 ஆயிரமும், 11 முதல் 12 -ஆம் வகுப்பு வரை ஆண்டுக்கு ரூ.12 ஆயிரமும் 2 தவணைகளில் மாணவிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது.
புதுப்பித்தல்: இத்திட்டத்தின் கீழ் மாணவிகள் கல்வி தொடர (புதியது) பெற்றவர்கள் மட்டும் குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் அல்லது அதற்கு இணையான கிரேடு மதிப்பெண்களுடன் முந்தைய வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்கும் பட்சத்தில் புதுப்பித்தல் கல்வி உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள்.
www.maef.nic.in,www.maef.nic.in என்ற இணைய தள முகவரியில் 31.10.2017-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் விண்ணப்பத்தை பதிவிறக்கி அனைத்து விண்ணப்பிக்கப்பட்ட சான்றாவணங்களுடன் பள்ளித் தலைமையாசிரியர், முதல்வர் சான்றளிக்கப்பட்ட கையொப்பத்துடன் அனைத்து ஆவணங்களுடன் 15.11.2017க்குள் விண்ணப்பித்து பயன் பெறலாம்.