நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி:அமைச்சர் வழங்கினார்
புதுக்கோட்டை மாவட்டத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த அரசுப் பள்ளி மாணவர்கள் 138 பேருக்கு விலையில்லா மடிக்கணினி சனிக்கிழமை வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த அரசுப் பள்ளி மாணவர்கள் 138 பேருக்கு விலையில்லா மடிக்கணினி சனிக்கிழமை வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகல்வித்துறை சார்பில் பிரகதம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு ஆட்சியர் சு.கணேஷ் தலைமை வகித்தார். நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாவட்டத்தைச் சேர்ந்த 138 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியது:
ஏழைகளுக்கு எட்டாக்கனியாக இருக்கும் மடிக்கணினியை உள்ளங்கை நெல்லிக்கனி போல குறித்த நேரத்தில் மாணவர்களுக்கு வழங்கவேண்டும் என்ற குறிக்கோளுடன் அரசு செயல்பட்டு வருகிறது. நீட் தேர்வு உள்ளிட்ட பல உயர் படிப்புகளுக்கு அரசுப் பள்ளி மாணவர்கள் தயாராகும் வகையில் தற்போது விலையில்லா மடிக்கணினி வழங்கப்படுகிறது. இதனைப் பயன்படுத்தி நீட் தேர்வு உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளில் அதிகளவில் வெற்றி பெற்று மாவட்டத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி, வேளாண்மைக் கல்லூரிகளில் சேர்ந்து படித்து மாவடத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றார். தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் பி.கே.வைரமுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.வனஜா, மாவட்டக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.