அரசின் 27 வகையான நிவாரணப் பொருள்கள் அறந்தாங்கி பகுதியில் இன்னும் 3 நாள்களில் வழங்கப்படும் என்றார் தமிழக கதர் மற்றும் தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன்.
அறந்தாங்கி ஒன்றியத்தைச் சேர்ந்த அழியாநிலை, நற்வளக்குடி செங்கமாரி, சிதம்பரவிடுதி, சிலட்டூர், அரசர்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்ட அவர் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரணப் பொருள்களை வழங்கி மேலும் கூறியது:
கஜா புயல் நிவாரணத்தொகை அவரவர் வங்கிக் கணக்கில் விரைவில் செலுத்தப்படும். பாதிக்கப்பட்ட பொதுமக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, 100 நாள் வேலைத் திட்டத்தில் 150 நாள்களாக நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நகர்ப்பகுதியில் மின்விநியோகம் சீரமைக்கப்பட்டுள்ளது. கிராமப் பகுதிகளில் பல்வேறு புதிய மின்கம்பங்கள் நடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் 1 வாரத்தில் இயல்பு நிலை திரும்பும் என்றார்.
சிதம்பரவிடுதி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வந்த அமைச்சரை பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சுப.மாறன் மற்றும் தலைமை ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் வரவேற்றனர். மேலும், அழியாநிலை கிராமத்தில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்றார். நிகழ்ச்சியின்போது, அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் க.பஞ்சவர்ணம், வட்டாட்சியர் க. கருப்பையா, அறந்தாங்கி கூட்டுறவு நிலவள வங்கித் தலைவரும், வடக்கு ஒன்றியச் செயலாளருமான சி. வேலாயுதம், கூட்டுறவு வங்கித் தலைவர்கள் மதியழகன், எம். ராஜேந்திரன், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.