புதுக்கோட்டை மாவட்டத்துக்கு நிகழாண்டுக்கான கொடி நாள் நிதி வசூல் ரூ. 98.32 லட்சமாக இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் தெரிவித்தார்.
ஆண்டு தோறும் டிச. 7ஆம் தேதி படைவீரர் கொடி நாள் வசூல் நாளாக நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை கொடி நாள் வசூலை ஆட்சியர் சு. கணேஷ் தொடங்கி வைத்து கூறியது: முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோரின் நலனுக்காக படைவீரர் கொடி நாள் வசூல் திரட்டப்படுகிறது. கடந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்துக்கு ரூ. 89.38 லட்சம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, இலக்கை விஞ்சி ரூ. 90.78 லட்சம் நிதி திரட்டி சாதனை புரிந்தோம். தற்போது நிகழாண்டில் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு ரூ. 98.32 லட்சம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது'' என்றார் கணேஷ். நிகழ்ச்சியின்போது முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குநர் செண்பகவள்ளி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.