கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மத்திய அரசு 13 லட்சம் லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கியுள்ளது என்றார் பாஜக தேசியச் செயலர் எச்.ராஜா.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே நற்பவளக்குடி, செங்கமாரி கோங்குடி உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திங்கள் கிழமை நிவாரணப் பொருள்களை வழங்கி அவர் மேலும் தெரிவித்தது:
புயல் பாதித்த 3 நாள்களிலேயே மத்திய குழு உடனடியாக பாதிப்புக்குள்ளான பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தது. அதனடிப்படையில் குழுவின் அறிக்கை மத்திய அரசிடம் சமர்பித்த பின்னர் நிவாரணத் தொகை இறுதி செய்யப்படும். முழுமையாக வீடிழந்த, வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள அனைவருக்கும் பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டித் தரப்படும். மேலும் வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவர்கள் எனில், புயல் பாதிப்பு காரணமாக என அறிக்கை அளிக்குமாறு தலைமை செயலாளருக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
காவிரி ஆற்றில் அணை கட்டுவது குறித்து இறுதி முடிவு எடுக்க வேண்டிய பொறுப்பு காவிரி ஆணையத்துக்கு உள்ளது. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ். திருநாவுக்கரசர் கர்நாடகாவில் கூட்டணி அரசு நடத்தும் முதல்வரை சந்தித்து முடிவை மாற்ற வேண்டியதுதானே. நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு சாதகமாகத்தான் இருக்கும் என்றார்.
நிகழ்ச்சிகளில் கட்சி நிர்வாகிகள் கவிதா ஸ்ரீகாந்த், ஆர்.எம். அண்ணாமலை மற்றும் ஜெயவீரபாண்டியன், ஏ.ஆர்.காடப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.