முகப்பு
புதுக்கோட்டை

"இயற்கை எரிவாயு எடுக்க சூழ்ச்சிகள் நிறைந்த சட்டத் திருத்தம்': இயக்குநர் கௌதமன்

நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டம் உள்ளிட்ட இயற்கை எரிவாயுத் திட்டங்களைச் செயல்படுத்த மத்திய அரசு சூழ்ச்சிகரமான

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:18 PM
பகிர்:

நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டம் உள்ளிட்ட இயற்கை எரிவாயுத் திட்டங்களைச் செயல்படுத்த மத்திய அரசு சூழ்ச்சிகரமான பல சட்ட திருத்தங்களைச் செய்துள்ளது என்றார் இயக்குநர் கௌதமன்.
புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராகப் போராடிவரும் மக்களை புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடினார். தொடர்ந்து, திட்டத்துக்கு எதிராக தெருமுனை பிரசாரம் மேற்கொண்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகத்தில் நீட் தேர்வு  விலக்கு கோரிக்கைக்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. அதனால், தமிழக எம்.பி.க்கள் அனைவரையும் சந்தித்து மக்களவையில் நீட் தேர்வுக்கு  எதிராக அழுத்தம் தரக் கோரிக்கை விடுத்துவருகிறோம். அதிலும் பயனில்லை என்றால் மாணவர்களைத் திரட்டி பெரியளவில் போராட்டத்தை தொடங்குவோம். இயற்கை எரிவாயு எடுக்க பல சூழ்ச்சிகரமான சட்டத் திருத்தங்களை மத்திய அரசு செய்துள்ளது. அந்தச் சட்டங்களைக் கையில் வைத்துக்கொண்டு திட்டத்துக்கு அனுமதி வழங்கி நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தைச்  செயல்படுத்த முயற்சிக்கலாம். 
இல்லையென்றால், மாநில அரசை மிரட்டி அனுமதி பெறலாம். எந்த வடிவத்தில் வந்தாலும் மக்கள் அத்திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். இத்திட்டம் குறித்து மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், பொறுப்பற்று பேசிவருகிறார்.
தமிழகத்தில் மாணவர்கள், மீனவர்கள், விவசாயிகள் பிரச்னைகளை கண்டுகொள்ளாத கமலும், ரஜினியும் தற்போது முதல்வர் கனவோடு அரசியலுக்கு வருகின்றனர். கதாநாயகனாக நடித்தவர்கள், இனி அப்பா, தாத்தா வேடங்களை ஏற்று நடிக்கலாம், முதல்வராக முடியாது. மக்கள் அவர்களை ஏற்க மாட்டார்கள். 
பாரம்பரிய சித்த வைத்தியத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது தொன்மை கொண்ட தமிழினத்தின் சித்தர்கள்,  சுவடிகளில் எழுதிய மருந்துக் குறிப்பை அழிக்கும் முயற்சி என்றார் அவர்.

முழு கட்டுரையைப் படிக்க →