தேசிய வேளாண் திட்டத்தின் கீழ் வீட்டில் காய்கறி தோட்டம் அமைத்திட மானியத்தில் விதைகள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புதுக்கோட்டை மாவட்டத்தில் புறநகர் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள மக்கள் ஊட்டச்சத்துள்ள உணவினை உட்கொள்வதை உறுதிப்படுத்திட கிராம மற்றும் புறநகர் வீட்டுத் தோட்டங்களில் காய்கறிகள் பயிரிடுவதை ஊக்குவிக்கும் வகையில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம், ரூ.20 மதிப்புடைய உயர் விளைச்சல் தரும் கத்தரி, தக்காளி, புடலங்காய், பாகற்காய், பீர்க்கங்காய், கீரை வகைகள், மிளகாய் மற்றும் கொத்தவரை ஆகிய காய்கறிகளில் ஏதேனும் ஐந்து காய்கறி விதைகள் அடங்கிய பாக்கெட்டுகள் 40 சதவீத மானிய விலையில் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி ஒவ்வொரு பயனாளியும் அதிகபட்சமாக ஆறு காய்கறி பாக்கெட்டுகள் வரைபெறலாம். வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களில் இவை விநியோகிக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.