தனியார் மருத்துவமனையில் செவிலியர் மர்மச் சாவு
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியில் புதன்கிழமை காலை தனியார் மருத்துவமனையில் செவிலியர் தூக்கிட்டு தற்கொலை செய்து
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியில் புதன்கிழமை காலை தனியார் மருத்துவமனையில் செவிலியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டதை தொடர்ந்து, சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மீமிசல் அருகே முத்துகுடா கிராமத்தை சேர்ந்த முத்துராஜா மகள் தாயம்மாள் (24). இவர் மணமேல்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவுப் பணியில் இருந்த அவர் புதன்கிழமை காலை மருத்துவமனையிலேயே துப்பட்டாவில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக குடும்பத்தினருக்கு மருத்துவமனை தரப்பிலிருந்து தகவல் வந்தது.
உறவினர்கள் சம்பவ இடத்துக்கு வருவதற்குள் தாயம்மாளின் சடலம் மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து, தாயம்மாளின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி, உறவினர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர், பிரேத ப் பரிசோதனை அறிக்கையில் இறப்பிற்கான காரணம் தெரியவரும்; சம்பந்தப்பட்டவர்களிடம் காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக கூறியதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
போராட்டம் காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.