கோயில் திருவிழா விவகாரம்: மறியலில் ஈடுபட்ட 65 பேர் கைது
ஆலங்குடி அருகே முத்துமாரியம்மன் கோயில் திருவிழா தொடர்பாக மறியலில் ஈடுபட்ட 65 பேர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
ஆலங்குடி அருகே முத்துமாரியம்மன் கோயில் திருவிழா தொடர்பாக மறியலில் ஈடுபட்ட 65 பேர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கொத்தமங்கலத்தில் மாரியம்மன் கோயில் திருவிழாவில், ஒரு தரப்பு மக்கள் நீதிமன்றத்தில் பெறப்பட்ட தீர்ப்பின்படி நிகழ்ச்சிகள் நடத்த உரிமை கோரி கோயில் முன்பு தர்னாவில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்துக்குச் சென்ற தனி வட்டாட்சியர் யோகேஸ்வரன், கீரமங்கலம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி ஒரே நாளில் இருதரப்பினரும் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுமெனக் கூறி சமரசம் செய்ததால் போராட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து, ஒரே நாளில் இரு தரப்பினர் நிகழ்ச்சி நடத்துவதை ஏற்க மறுத்த மற்றொரு தரப்பினர் கொத்தமங்கலம் கடைவீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியும் ஏற்க மறுத்ததால், 20 பெண்கள் உள்பட 65 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, திருவிழா காப்புக் கட்டுவது தொடர்பாக வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.