தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து, புதுக்கோட்டையில் சமத்துவ மக்கள் கட்சி, இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் அருகே சமத்துவ மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் முகமது கனி தலைமை வகித்தார். இதில், பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய போலீஸாரை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர். மாவட்ட இளைஞரணி செயலாளர் முகமதுசுல்தான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பினர் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி தலைமை வகித்தார். இதில், துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்தும், தமிழக அரசை பதவி விலக வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர்.