கந்தர்வகோட்டையில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது. கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சன்குறிச்சியில் இயங்கிவரும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளை சார்பில் பொதுமக்களிடையே ஊழல் குறித்த ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரங்கள் நடைபெற்று வருகின்றது. இதனை முன்னிட்டு கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி பள்ளி வளாகம் முன்பு புறப்பட்டு செட்டியார் தெரு, பெரிய கடைவீதி, மெயின் ரோடு வழியாக பேருந்து நிலையத்தை சென்றடைந்தது. பேரணியை வங்கியின் மேலாளர் ஜிரேந்திரகுமார், விஜயசுந்தர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பேரணியில், பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சோமசுந்தரம், ஓவிய ஆசிரியர் மனோகரன் மற்றும் பள்ளி மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.