விராலிமலை அருகே குழாயடியில் ஏற்பட்ட தகராறில் கர்ப்பிணியைத் தாக்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை விராலிமலை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
விராலிமலை அருகேயுள்ள பூவகோணன்பட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி மலர்(30). 2 மாத கர்ப்பிணியான இவர், கடந்த சனிக்கிழமை காலை வீட்டின் அருகேயுள்ள பொதுக் குழாயில் தண்ணீர் பிடிக்கச் சென்றபோது, அதே ஊரைச் சேர்ந்த சுப்பையா(60), அவரது மகன் சண்முகம் (37), ராஜேந்திரன்(34) ஆகிய 3 பேரும் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்த கர்ப்பிணி மலரை தகாத வார்த்தையால் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், சுப்பையா, சண்முகம், ராஜேந்திரன் ஆகியோர் சேர்ந்து மலரைத் தாக்கியதில் மலருக்கு கரு கலைந்து ரத்தப்போக்கு ஏற்பட்டு வலியால் துடித்துள்ளார்.
இதைக்கண்ட அங்குள்ளவர்கள் மலரை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து மலரின் கணவர் ராஜேந்திரன் விராலிமலை போலீஸில் அளித்த புகாரைத் தொடர்ந்து சுப்பையா, சண்முகம், ராஜேந்திரன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்கள் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.