கந்தர்வகோட்டையில் ரேஷன் கடை விற்பனையாளர்கள் ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வட்ட வழங்கல் அதிகாரி செல்வகணபதி தலைமை வகித்தார். கூட்டத்தில் உணவு வழங்கல் அட்டையில் (ஸ்மார்ட் கார்டு) உள்ள நபர்களின் ஆதார் அட்டை எண்ணை, ஸ்மார்ட் கார்டுடன் இணைக்க வேண்டும். விற்பனையாளர்கள் குறிப்பிட்ட நேரத்தில் கடைகளுக்குச் சென்று ரேஷன் பொருட்களை எடை குறையாமல் வழங்க வேண்டும்.
தாலுகாவில் உள்ள பெரும்பாலான கடைகள் குறிப்பிட்ட நேரத்தில் திறக்கப்படுவதில்லை என புகார்கள் வருகின்றன. அவ்வாறு தாமதமாக திறக்கும் விற்பனையாளர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது. வட்டார கூட்டுறவுச் சங்க மேற்பார்வையாளர் மேனகா, ரேஷன் கடை விற்பனையாளர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.