புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வல்லத்திராகோட்டையில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வல்லத்திராகோட்டை அம்மன் கோயில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. அறந்தாங்கி - புதுக்கோட்டை சாலையில், எல்கை அமைக்கப்பட்டு, பெரிய மாட்டுவண்டி, கரிச்சான் மாட்டுவண்டி, நடு மாட்டுவண்டி, பூஞ்சிட்டு மாட்டுவண்டி ஆகிய 4 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.
பெரிய மாட்டுவண்டி பிரிவில் 7 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் தினையாகுடி பெரிய அய்யனார், சிவகங்கை கொத்தடி சீமான், தட்டாம்பட்டி அமர்நாத் ஆகியோரது மாட்டுவண்டிகள் முதல் 3 இடங்களைப் பிடித்தன.
கரிச்சான் மாட்டுவண்டி பிரிவில் கலந்துகொண்ட 17 மாட்டுவண்டிகளில், தள்ளாம்பட்டி ஓம் பிரியா, பொன்பேத்தி மருதுபாண்டி, திருச்சி செந்தில்பிரசாத் ஆகியோரது மாட்டுவண்டிகள் முதல் 3 இடங்களைப் பிடித்தன.
நடுமாட்டுவண்டி பிரிவில் பங்கேற்ற 15 மாட்டு வண்டியில் திருவாப்பாடி பெரியசாமி முதல் இடத்தையும், திருச்சி செந்தில்பிரசாத் 2 ஆவது இடத்தையும், பூக்கொல்லை காளிமுத்து ரீத்திஸ் 3 ஆவது இடத்தையும் பெற்றனர். பூஞ்சிட்டு மாட்டுவண்டி பிரிவில் 25 மாட்டுவண்டிகள் கலந்து கொண்டன. இதில் பதனிக்குடி சிவசாமி மாட்டுவண்டி முதல் இடத்தையும், அம்மன்பேட்டை ராஜேஸ் 2 ஆவது இடத்தையும், பேராவூரணி ராஜா 3 ஆவது இடத்தையும் பெற்றனர். தொடர்ந்து, போட்டியில் வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.