காஷ்மீரில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் புதுக்கோட்டையில் சனிக்கிழமை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
புதுக்கோட்டை அரசு உயர் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சிவசக்திவேல் தலைமை வகித்தார். ஆசிரியர் மீனாட்சி சுந்தரம், சாலைப் பாதுகாப்பு மற்றும் மீட்புச் சங்கத் தலைவர் மோகன்ராஜ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
மாணவ, மாணவிகளும், ஆசிரியர்களும் மெழுகுவர்த்தி ஏந்தி உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல, திருவரங்குளத்தில் விசுவ ஹிந்து பரிஷத் - தென் தமிழ்நாடு அமைப்பின் சார்பில் அதன் மாநிலச் செயலர் இராம. சத்தியமூர்த்தி, மாவட்டச் செயலர் க. அரங்குளவன் ஆகியோர் தலைமையில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியில், புதுக்கோட்டை நகரச் செயலர் செல்லதுரை, இணைச் செயலர் கரசேவா மாணிக்கம், திருவரங்குளம் ன்றியப் பொறுப்பாளர் சிவராஜன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
அறந்தாங்கியில்... ஞாயிற்றுக்கிழமை பல்வேறு அமைப்புகள் சார்பில் காஷ்மீரில் தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
கராத்தே பிரதர்ஸ் சமூக நல அறக்கட்டளை, ஆத்மா சமூக நல அறக்கட்டளை, தமிழன் அசோஷியேசன், மெரினா குரூப்ஸ், ஸ்ரீ பொற்குடையார் அன்னதான அறக்கட்டளை, ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆட்டோ பைனான்ஸ் ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகள் மெரினா பிள்ளைவயல் இராம.பஞ்சநாதன் தலைமையில் தமிழன் டான்.கே.சத்யா முன்னிலையில் அரசு மருத்துவமனையிலிருந்து ஊர்வலமாக வந்து பேருந்து நிலையம் நிறுத்தம் முன்பு அமைக்கப்பட்ட வீரர்களின் உருவப்படம் கொண்ட பதாதைகளுக்கு மலர் மாலை அணிவித்தும் மெழுகு வர்த்தி ஏற்றியும் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.
பொன்னமராவதி: அடுத்த காரையூர் பேருந்து நிறுத்தம் அருகே உயிரிழந்த வீரர்களின் உருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சார்பில் மௌன ஊர்வலம் நடைபெற்றது.