பொன்னமராவதி வட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு வட்டாட்சியர் ஆர்.பாலகிருஷ்ணன் தலை மை வகித்தார். கூட்டத்தில் சைல்டு லைன் இணை மைய இயக்குநர் மு.குழந்தைவேலு பேசியது:
குழந்தை திருமணம் மற்றும் பாலியல் தொந்தரவு தொடர்பாக 24 மணி நேர இலவச தொலைபேசி எண் 1098ல் புகார் தெரிவித்து நிவாரணம் பெறலாம்.
பொன்னமராவதி வட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் 1098 எண்ணிற்கு 19 புகார்கள் வந்துள்ளன. இப்புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் உதவியோடு மாநில அரசுகள், தொண்டு நிறுவனங்கள், அரசுத்துறைகள் இணைந்து நடத்தும் இத்திட்டம் குறித்த விழிப்புணர்வை பொன்னமராவதி வட்டத்திற்கு உள்பட்ட அனைத்து கிராமங்களிலும் ஏற்படுத்தி குற்றங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றார். கூட்டத்தில் வட்டாரக்கல்வி அலுவலர்கள் ராஜாசந்திரன், பால்டேவிட் ரொசாரியோ, வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஆர்.செல்வக்குமார், காவல் உதவி ஆய்வாளர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.