அறந்தாங்கி கோட்டத்தில் 17,250 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் அறந்தாங்கி கோட்ட கால்நடைப் பராமரிப்பு துறை உதவி இயக்குநர் மரு. ரவீந்திரன்.
தமிழ்நாடு அரசு கால்நடைப் பராமரிப்பு துறை சார்பில் கோமாரி நோய் தடுப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக 16-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம்கள்வெள்ளிக்கிழமை தொடங்கியது.
புதுக்கோட்டை மண்டல இணை இயக்குநர் மரு. இளங்கோவன் அறிவுறுத்தலின்படி அறந்தாங்கி கோட்டத்தின் சார்பில் அரிமளம் ஒன்றியம், கைக்குளான்வயல் கிராம ஊராட்சிக்குட்பட்ட கரையப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற முகாமை தொடக்கி வைத்து கோட்ட உதவி இயக்குநர் ரவீந்திரன் மேலும் பேசியது: கோமாரி நோயானது ஒருவகை நச்சுயிரியால் வருவதாகும். இந் நோய் தாக்கிய கால்நடைகளுக்கு வாய் மற்றும் கால்களில் புண்கள் ஏற்படும். சரியாக உணவு உண்ணாது. அதிக காய்ச்சலுடன் மிகவும் சோர்வாகக் காணப்படும். மேலும் பசுக்களுக்கு பால் உற்பத்தித் திறன் குறையும். காளைகளுக்கு வேலைத்திறன் குறைவதோடு இந் நோய் பாதித்த கால்நடைகள் இறக்க நேரிடும்.
21 நாட்களுக்கு நடைபெறும் முகாமில் அரிமளம், அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி ஒன்றியங்களை உள்ளடக்கிய அறந்தாங்கி கோட்டத்தில் 17,250 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர். முகாமில் நடமாடும் கால்நடை மருந்தக மருத்துவர் இளவரசி, கே.புதுப்பட்டி கால்நடை உதவி மருத்துவர் நிமலேசன், தலைமையில் உதவியாளர் சங்கர் உள்ளிட்ட குழுவினர் 200-க்கும் அதிகமான கால்நடைகள், கன்றுகளுக்கு கோமாரி தடுப்பூசி போட்டனர். ஏற்பாடுகளை கைக்குளான்வயல் ஊராட்சி செயலர் சாத்தையா செய்திருந்தார்.