கரூரில் உயிரிழந்த புதுக்கோட்டையைச் சேர்ந்தவரின் சடலத்தை எடுத்து வரும்போது, அமரர் ஊர்தி திடீரென தீப்பிடித்து எரிந்தது.
புதுக்கோட்டை நமணசமுத்திரம் அருகே ஆண்டிப்பட்டியைச் சேர்ந்தவர் அகத்தியன் (53). இவர் வேலைக்காக கரூர் சென்ற போது அங்கு விபத்தில் இறந்தார்.
கரூர் அரசு மருத்துவமனையில் இவரது உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டு, வெள்ளிக்கிழமை இரவு அமரர் ஊர்தி மூலம் புதுக்கோட்டை நோக்கி எடுத்து வரப்பட்டது. வழியில் இந்த ஊர்தி பழுதடைந்ததால் , புதுக்கோட்டையில் இருந்து வேறொரு அமரர் ஊர்தியை வரவழைத்தனர்.
தொண்டைமான்நல்லூர் சுங்கச்சாவடிப் பகுதியில் சடலம் மாற்றப்பட்டது. புதுக்கோட்டை அமரர் ஊர்தி சடலத்தை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட சிறிது தொலைவில் அந்த வண்டியில் இருந்து புகை வந்துள்ளது. இதையடுத்து ஓட்டுநர் இறங்கி வந்து பார்த்தபோது வண்டி தீப்பிடிக்க இருப்பதை உணர்ந்து அவசர அவசரமாக சடலத்தை இறக்கியுள்ளார். சடலத்தை இறக்கிய சிறிதுநேரத்தில் அமரர் ஊர்தி மளமளவெனத் தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து மீண்டும் வேறொரு வாகனம் வரவழைக்கப்பட்டு அகத்தியனின் சடலம் எடுத்துச் செல்லப்பட்டது. கீரனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.