அன்றாட வாழ்வில் சமமாக விட்டுக்கொடுத்து வாழ்ந்து வந்தால் கணவன், மனைவிக்கிடையே பிரச்னையே ஏற்படாது என்றார் காவல் துணைக் கண்காணிப்பாளர் முத்துராஜா.
ஆலங்குடி மகளிர் காவல் நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற குடும்பவிழா விழாவுக்குத் தலைமை வகித்து, மேலும் அவர் பேசியது:
கணவன், மனைவிக்கிடையே மனவருத்தம் ஏற்படுவது அனைத்து குடும்பங்களில் நடக்கும் நிகழ்வு. அதனை வளர விடாமல் சண்டை எதுவாக இருந்தாலும் தங்களுக்குள் பேசித் தீர்வு காண வேண்டும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துவிட்டாலே பாதிப் பிரச்னை குறைந்துவிடும். விட்டுக் கொடுத்தல் என்பது இருவருக்கிடையே சமமாக இருக்க வேண்டும்.
தினமும் குறைந்தது 10 நிமிடங்களாவது நேரில் மனம் திறந்து பேசிக்கொள்ள வேண்டும். தவறு நிகழும்போது மன்னிப்புக் கேட்கத் தயங்கக்கூடாது. இப்படி அன்றாட வாழ்வில் இருவரும் சமமாக விட்டுக்கொடுத்து வாழ்ந்து வந்தாலே கணவன், மனைவிக்கிடையே பிரச்னைகள் ஏற்படாது என்றார். காவல் நிலையத்துக்கு புகார் அளிக்க வரும் பெண்களுக்கு பாலூட்டும் தனி அறையை காவல் துணைக்கண்காணிப்பாளர் முத்துராஜா திறந்துவைத்தார். தொடர்ந்து, நிலைய வளாகத்திலும் அவர் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
இந்த விழாவில் மகளிர் காவல் ஆய்வாளர் கௌரி, உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.